
இதுவரை காலமும் பின்பற்றப்பட்டு வந்த “ஒரே தட்டில் அனைத்து உணவுகளையும் பரிமாறும்” முறை கைவிடப்படவுள்ளமை இந்தத் திட்டத்தின் மிக முக்கியமான சிறப்பம்சமாக கூறப்படுகிறது.அதற்குப் பதிலாக சோறு, காய்கறிகள், கீரை வகைகள் மற்றும் புரதச் சத்துணவுகள் (இறைச்சி, மீன் அல்லது முட்டை) ஆகியவை தனித்தனியாகப் பிரிக்கப்பட்ட பிரத்யேக தட்டுகளில் அழகாகப் பரிமாறப்படும்.இவ்வாறு உணவை நேர்த்தியாக அடுக்கி வழங்குவது, நோயாளிகளின் பசியைத் தூண்டுவதுடன், அவர்களுக்கு உணவின் மீது ஒரு நேர்மறையான உளவியல் ரீதியான தாக்கத்தை ஏற்படுத்தும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.இந்தத் திட்டத்திற்காக அபேக்ஷா மருத்துவமனையில் ஒரே நேரத்தில் 2,000 பேருக்கு சமைக்கக்கூடிய நவீன வசதிகள் கொண்ட சமையலறை அமைக்கப்பட்டுள்ளது.பாரம்பரியமாக ‘சமையலறை’ (Kitchen) என்று அழைக்கப்பட்ட பகுதி, இனி “உணவு மற்றும் பானங்கள் திணைக்களம்” (Food and Beverages Department) எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.உணவு தயாரிக்கும் மற்றும் பரிமாறும் ஊழியர்களுக்கு நவீன கால சமையல் கலை, சுகாதாரம் மற்றும் உணவை அலங்கரிக்கும் முறைகள் குறித்து விசேட பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.நாளை அபேக்ஷா மருத்துவமனையில் தொடங்கி வைக்கப்படும் இந்தத் திட்டம், விரைவில் நாடு முழுவதும் உள்ள அனைத்து அரச மருத்துவமனைகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு தெரிவித்துள்ளது.
