
டெல்லியில் இருந்து பாக்டோக்ரா (Bagdogra) நோக்கி 230 பயணிகளுடன் பறந்து கொண்டிருந்த இண்டிகோ விமானத்தில், கழிவறையில் கண்டெடுக்கப்பட்ட ஒரு சிறிய டிஷ்யூ காகிதம் ஒட்டுமொத்த விமானத்தையும் அதிர வைத்துள்ளது.இன்று காலை டெல்லியில் இருந்து புறப்பட்ட இண்டிகோ 6E 6650 விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, அதன் கழிவறையில் கையால் எழுதப்பட்ட ஒரு குறிப்பு கண்டெடுக்கப்பட்டது.அந்த டிஷ்யூ காகிதத்தில் விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக எழுதப்பட்டிருந்ததால் விமானத்திற்குள் பெரும் பதற்றம் நிலவியது.மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, பாதுகாப்பு நெறிமுறைகளின்படி விமானம் உடனடியாக லக்னோ விமான நிலையத்துக்குத் திசைதிருப்பப்பட்டது.காலை 8:46 அளவில் விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வழங்கப்பட்டு, 9:17 அளவில் விமானம் லக்னோவில் பத்திரமாகத் தரையிறக்கப்பட்டது.விமானத்தில் 8 சிறுவர்கள், 2 விமானிகள் மற்றும் 5 பணியாளர்கள் என மொத்தம் 238 பேர் இருந்தனர்.விமானம் தரையிறங்கியதும் அது தனிமைப்படுத்தப்பட்ட பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு உடனடியாக இராணுவத்தினர் மற்றும் வெடிகுண்டு அகற்றும் பிரிவினர் விமானத்தைச் சூழ்ந்து தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டு, அவர்களது உடைமைகளும் முழுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.எனினும், எந்தவித சந்தேகத்துக்கு இடமான பொருட்களும் மீட்கப்படவில்லை என இந்திய காவல்துறை தெரிவித்துள்ளது.

