
இலங்கை தமிழரசுக் கட்சி (ITAK), தனது புதிய நாடாளுமன்ற குழுத் தலைவராக 35 வயதான மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கத்தை நியமித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுவரை அந்தப் பொறுப்பில் இருந்த மூத்த யாழ்ப்பாண நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் உள்கட்சி கொள்கைகள் மற்றும் பொறுப்புத்தன்மை தொடர்பான முரண்பாடுகளின் பின்னணியில் அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.அரசியல் யாப்புக் கவுன்சிலில் (Constitutional Council) இருந்து விலக மறுத்த சிறீதரனின் நிலைப்பாடே இந்த முடிவுக்குக் காரணமாக அமைந்துள்ளது.குறிப்பாக, மூத்த இராணுவ அதிகாரிகளுக்கு ஆதரவளித்ததாக தமிழரசுக் கட்சியின் அரசியல் குழு குற்றச்சாட்டு முன்வைத்துள்ளது.கட்சியின் நீண்ட கால நிலைப்பாடுகளுக்கும், தமிழ் மக்களின் உணர்வுகளுக்கும் முரணாக செயற்பட்டதாக தமிழரசுக் கட்சியின் அரசியல் குழு குறிப்பிடுகின்றது. இராணுவ அதிகாரிக்கு வாக்களித்தது தொடர்பில் தமிழரசுக் கட்சி குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்ற அதேநேரம், நீண்ட காலமாக சிறீதரனை கட்சிப் பொறுப்புக்களில் இருந்து நீக்க வேண்டும் என்று எடுத்த முடிவின் பிரகாரம், தற்போதைய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சிறீதரன் தரப்பில் கூறப்டுகின்றது.
