
65,000 மேலதிக விசாக்களை வழங்குகிறது ட்ரம்ப் நிர்வாகம்.அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் நிர்வாகம், எதிர்வரும் செப்டம்பர் 30 ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள் மேலதிகமாக 65,000 ‘H-2B’ பருவகால பணியாளர் விசாவழங்கல்களை அதிகரிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள தொழிலாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில், பருவகால பணிகளுக்காக வழங்கப்படும் ‘H-2B’ விசாக்களின் எண்ணிக்கையை 65,000 இனால் அதிகரிக்க ட்ரம்ப் நிர்வாகம் தீர்மானித்துள்ளது. கட்டுமானம், விருந்தோம்பல் , நில அலங்காரம் மற்றும் கடல் உணவு பதப்படுத்துதல் போன்ற துறைகளில் போதிய அமெரிக்க பணியாளர்கள் கிடைக்காததால், பல நிறுவனங்கள் கடும் நிதி நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளன. இதனைத் தவிர்ப்பதற்காகவே இந்த மேலதிக விசாக்கள் வழங்கப்படவுள்ளதாக சர்வதேக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஆண்டுதோறும் வழங்கப்படும் 66,000 விசாக்களுடன், தற்போது இந்த 65,000 விசாக்களும் சேர்க்கப்படுவதால் மொத்த எண்ணிக்கை கிட்டத்தட்ட இருமடங்காக உயர்ந்துள்ளது. இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2025 இல் மீண்டும் வெள்ளை மாளிகைக்குத் திரும்பிய ஜனாதிபதி ட்ரம்ப், சட்டவிரோத குடியேற்றவாசிகளுக்கு எதிராகக் கடும் நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையிலும், வர்த்தக நிறுவனங்களின் கோரிக்கையை ஏற்று இந்த விசா உயர்வை வழங்கியுள்ளார். அதேவேளை, தொழில்நுட்பத் துறையினருக்கான ‘H-1B’ விசாக்களுக்கு 100,000 டொலர் கட்டணத்தை விதித்து, அத்துறையில் கட்டுப்பாடுகளை இறுக்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது

