
பிரபல சுற்றுலா வழிகாட்டி அமைப்பான ‘டிராவல் ஒஃப் பாத்’, 2026-ஆம் ஆண்டில் சுற்றுலா பயணிகள் அமைதியாகவும் பாதுகாப்பாகவும் பயணம் செய்யக்கூடிய உலகின் மிக பாதுகாப்பான தீவுகளின் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது.
பயணிகளின் நேரடி அனுபவக் கருத்துக்கள், மிகக் குறைந்த குற்ற விகிதம், வலுவான உள்கட்டமைப்பு மற்றும் புயல் ஆபத்துகள் இல்லாத புவியியல் அமைப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்தத் தரவரிசை தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வில் 100-க்கு 98 புள்ளிகளைப் பெற்று கரீபியன் பிராந்தியத்தில் உள்ள அரூபா தீவு உலகின் மிக பாதுகாப்பான தீவாக முதலிடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது.
இந்தத் தரவரிசையில் 94 புள்ளிகளுடன் கேமன் தீவுகள் இரண்டாம் இடத்தையும், 93 புள்ளிகளுடன் அங்குயிலா மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளன.
ஐரோப்பிய கண்டத்திலிருந்து மால்டா தீவு 91 புள்ளிகளுடன் நான்காவது இடத்தைப் பெற்றுள்ள நிலையில், நெதர்லாந்தின் கட்டுப்பாட்டில் உள்ள போனைர் மற்றும் சபா தீவுகள் தலா 90 புள்ளிகளுடன் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.
மேலும், பிரித்தானியாவின் ஐல் ஒஃப் மேன், மான்ட்செரட், பார்படோஸ் மற்றும் தாய்லாந்தின் புக்கெட் ஆகிய தீவுகளும் 2026-ஆம் ஆண்டின் பாதுகாப்பான 10 தீவுகளின் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
வலுவான சட்ட அமுலாக்கம், சுற்றுலா பயணிகளுக்கான சிறப்புப் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் புயல் மண்டலங்களுக்கு வெளியே அமைந்திருக்கும் இயற்கைச் சூழல் ஆகியவையே இத்தீவுகள் முதன்மை பெற முக்கியக் காரணங்களாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
அமைதியான சூழலில் இயற்கை அழகை ரசிக்க விரும்பும் சர்வதேச சுற்றுலா பயணிகளுக்கு இந்த 2026 தரவரிசைப் பட்டியல் மிகச் சிறந்த வழிகாட்டியாக அமையும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.