
இலங்கையிலுள்ள வங்கிகள் இனிவரும் காலங்களில் வெறும் நிதி இலாபத்தை மாத்திரம் நோக்கமாகக் கொள்ளாது, கற்றல் மூலம் வருவாய் என்ற புதிய அணுகுமுறையை நோக்கி நகர வேண்டும் என மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க வலியுறுத்தியுள்ளார். தேசிய வங்கி மற்றும் நிதி மாநாட்டில் உரையாற்றும் போது அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், பாரம்பரிய நிதி வருவாய் கணக்கீடுகள் இனி போதுமானதாக இருக்காது எனவும் அவர் கூறியுள்ளார். தொழில்நுட்ப மாற்றங்கள் மற்றும் சுற்றுச்சூழல் சவால்களை எதிர்கொள்வதற்குத் தரவுத்திறன் மற்றும் புத்தாக்க சோதனைகளுக்காக வங்கிகள் மூலதனத்தை ஒதுக்க வேண்டும் எனவும் மத்திய வங்கி ஆளுநர் வலியுறுத்தியுள்ளார். டிஜிட்டல் மாற்றத்தை வெறும் தகவல் தொழில்நுட்ப நடவடிக்கையாகப் பார்க்காது, வங்கியின் அடிப்படை நிதி மூலோபாயமாக கருத வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். காலநிலை அபாயங்கள் என்பவை நிதி அபாயங்களே என எச்சரிக்கை விடுத்துள்ள ஆளுநர், இவை வங்கிகளின் சொத்து மதிப்பு மற்றும் கடன் செயல்திறனை நேரடியாகப் பாதிக்கும் எனவும் மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

