
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மூன்று சிரேஷ்ட விரிவுரையாளர்கள் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.பல்கலைக்கழகப் பேரவையின் மாதாந்தக் கூட்டம் நேற்று (07), துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தலைமையில் இடம்பெற்ற போது இந்தப் பதவி உயர்வுக்கு பல்கலைக்கழகப் பேரவை ஒப்புதல் வழங்கியது.அந்த அடிப்படையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மருத்துவபீடம், வணிக பீடம், கல்வியல் துறை ஆகியவற்றின் சிரேஷ்ட விரிவுரையாளர்களே இவ்வாறு பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.யாழ் பல்கலைக்கழக மருத்துவபீட மகப்பேற்றியல் மற்றும் பெண்நோயியல் துறையின் சிரேஸ்ட விரிவுரையாளர் வைத்திய நிபுணர். ரகுராமன், முகாமைத்துவ கற்கைகள் வணிக பீடத்தின்நிதி முகாமைத்துவ துறையைச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர் சசீலா பாலகோபி மற்றும் கல்வியல் துறையின் தலைவரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான ஆனந்தமயில் நித்திலவர்ணன் ஆகியோரே இவ்வாறு பேராசிரியர்களாகப் பதவி உயர்வு பெற்றுள்ளனர்.பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுச் சுற்றறிக்கை நியமங்களுக்கு அமைய திறமை அடிப்படையில் பேராசிரியர் பதவிக்கு விண்ணப்பித்த குறித்த சிரேஷ்ட விரிவுரையாளர்களின் மதிப்பீடு மற்றும் நேர்முகத் தேர்வு முடிவுகள் பேரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.அவற்றின் அடிப்படையில், குறித்த மூன்று சிரேஷ்ட விரிவுரையாளர்களும் பேராசிரியராகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
