
மண்டைதீவு படுகொலை மற்றும் புதைகுழி வழக்கு மீண்டும் எதிர்வரும் செப்ரெம்பர் 22 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இன்று(28.07.2026) ஊர்காவற்றுறை நீதிமன்றில் நீதிவான் அனீபா ரஜீவ் முன்னிலையில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்போது யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரால் மேலதிக சான்றுகள் சமர்ப்பிக்கப்பட்டது.
குறித்த வழக்கின் வழக்காளிகள் சார்பில் சட்டத்தரணி செபமாலைமுத்து கிருஸ்ரபெலினாவுடன் காணாமல் போனோர் அலுவலகத்தின் சட்டத்தரணி பூர்ணி மரியநாயகம், அதன் பிராந்திய இணைப்பாளர் த.செல்வக்குமார், வேலணை பிரதேச சபையின் உறுப்பினரும் தீவக முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான சுவாமிநாதன் பிரகலாதன் மற்றும் பிரதேச சபையின் உறுப்பினர் அனுஷிய ஜெயகாந்த் ஆகியோர் இன்று குறித்த வழக்கு சார்பில் நீதிமன்றில் முன்னிலையாகி இருந்தனர்.
முற்பகல் 10 மணிக்கு விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட குறித்த வழக்கு வாதப் பிரதிவாதங்களின் பின் பிற்பகல் 2.30 மணிவரை ஒத்திவைக்கபட்டது.
பிற்பகல் 2.30 மணிக்கு மீண்டும் விசாரணைக்காக எடுக்கப்பட்ட குறித்த வழக்கின் போது வழக்காளிகளின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகளால் குறித்த விடயம் தொடர்பில் அடையாளப்படுத்தப்பட்ட இடத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அடையாளப்படுத்தப்பட்ட குறித்த காணியின் உரித்து யாருடையது என்பதை உறுதி செய்து அறிக்கை பெற்றுக் கொள்ளவேண்டும் என்று கிராம சேவகர், பிரதேச செயலர், பிரதேசத்தின் தவிசாளர், வழக்கின் சார்பானவர்கள் , சட்ட விசாரணை அதிகாதி, பொலிசார், பிரதேச முக்கியஸ்தர்களுடன் கலந்துரையாடல் நடத்த ஆவன செய்யுமாறு நீதிமன்றில் கோரிக்கை முன்வைத்தனர்.
