கோடீஸ்வரர்களைக்கடத்தி கப்பம் கோரிய பொலிசார் பணிநீக்கம்!!

 கோடீஸ்வரர்களைக் கடத்தி, கடமை நேரத்தில் பணம் பறித்த குற்றச்சாட்டில் 8 அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்படவுள்ளனர்.

அதன்படி மர்ம நபர்களால் ஒரு கோடீஸ்வர வர்த்தகர் கடத்தப்பட்டு, 10 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் எட்டு காவல்துறை அதிகாரிகளைப் பணிநீக்கம் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தற்போது விளக்கமறியல் சிறையில் உள்ள இந்த அதிகாரிகளின் சேவைகள் இடைநிறுத்தப்படும் என்பதை, காவல்துறை ஊடகப் பேச்சாளரும், உதவிப் காவல்துறை கண்காணிப்பாளருமான உதய குமார வுட்லர் உறுதிப்படுத்தினார்.

பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள அதிகாரிகளில், பல்வேறு காவல்துறை நிலையங்களில் பணியாற்றியவர்கள் அடங்குவர். இவர்களில் செட்டிக்கூளம் காவல்துறை நிலையத்தைச் சேர்ந்த ஒரு காவல்துறை ஆய்வாளர், கடுகண்ணாவ மற்றும் வெல்லாவலி காவல்துறை நிலையங்களைச் சேர்ந்த இரண்டு உப ஆய்வாளர்கள், மற்றும் கோபேகனே காவல்துறை நிலையத்தில் பணியாற்றிய ஒரு சார்ஜன்ட் ஆகியோர் அடங்குவர்.

இவர்களுடன், செவனகல, கிராண்ட்பாஸ், தெலிகட மற்றும் பதுளை ஆகிய காவல்துறை நிலையங்களுடன் இணைக்கப்பட்டிருந்த நான்கு காவல்துறை கான்ஸ்டபிள்களும் பணிநீக்கம் செய்யப்படவுள்ளனர்.

இந்தக் குற்றச் சம்பவம் 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 18 ஆம் திகதி இடம்பெற்றது. அக்காலப்பகுதியில், கொழும்பு வடக்கு பிரிவுக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் கடமையாற்றிக்கொண்டிருந்த இந்த அதிகாரிகள், ‘முகமது ரவூப் முகமது முவாத் அகமது’ எனும் கோடீஸ்வர வர்த்தகரைக் கடத்திச் சென்றதாகக் கூறப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து, அவரை கொலை செய்துவிடுவதாக மிரட்டியும், மரண பயத்தை ஏற்படுத்தியும், அவரிடமிருந்த இரண்டு கிலோகிராமுக்கும் அதிகமான எடையுள்ள தங்க நகைகளைக் கொள்ளையடித்ததாக அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த பாரிய கொள்ளைச் சம்பவம் தொடர்பில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட பிரிவொன்று விரிவான விசாரணைகளை மேற்கொண்டது.

அவ்விசாரணைகளின் போது வெளிப்படுத்தப்பட்ட உண்மைகளின் அடிப்படையிலும், சட்டமா அதிபரின் அறிவுறுத்தல்களின் பேரிலும், இச்சம்பவத்துடன் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் காவல்துறை அதிகாரிகளைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன; இவர்கள் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *