
தெஹிவளை – கல்கிஸ்ஸ மாநகர சபையின் கழிவகற்றல் பணியில் ஈடுபட்டிருந்த ஷிரான் பாசிக் இளமை காலத்தில் மிக வறுமையில் வாடியவர்.
1978 அக்டோபர் 24 ஆம் திகதி தெஹிவளையில் பிறந்த இவர் பல பில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்களுக்கு உரிமையாளராக மாறியுள்ளார்.
ஆரம்பத்தில் தெஹிவளைப் பகுதியில் இருந்த “கசிப்பு ஆனந்தா” என்பவருடன் இணைந்து சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்டுள்ளார். அப்பகுதியின் அரசியல்வாதியாக இருந்த தனசிறி அமரதுங்கவுடனும் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
தனசிற தெஹிவளை – கல்கிஸ்ஸ மாநகர சபையின் மேயராகவும் பணியாற்றினார். அவருடனும் நெருங்கிய தொடர்பு இருந்ததாகக் கூறப்படுகிறது.
பின்னர் இந்தச் சட்டவிரோத மதுபான விற்பனையில் இருந்து போதைப்பொருள் வியாபாரத்திற்கு மாறியுள்ளார். அப்போது “பொட்ட நௌபர்” என்பவரிடமிருந்து மொத்தமாகப் போதைப் பொருட்களைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
அத்துடன் தெஹிவளை களுபோவில வைத்தியசாலை பகுதியில் ஏற்பட்ட பிரதேச ரீதியான அதிகாரப் போட்டியின் விளைவாக இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டிலிருந்து தப்பித்து அவர் துபாய்க்குச் செல்கிறார்.
சுமார் நான்கு ஆண்டுகள் துபாயில் தங்கியிருந்து பின்னர் மீண்டும் இலங்கைக்கு வந்து தனது வலையமைப்பைப் பலப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
தெஹிவளை – கல்கிஸ்ஸை நகர சபையில் பணியாற்றிய காலத்தில் அடையாளம் கண்டுகொண்ட நண்பர்களான நாஜின் மொஹமட் சித்தீக் ஆகியோரையும் இணைத்துக் கொண்டுள்ளார்.
நாஜின் என்பவரே ஷிரான் பாசிக்குக்கு மொஹமட் சித்தீக்கை அறிமுகப்படுத்தியுள்ளார். அந்த அறிமுகத்தின் ஊடாக சித்தீக் பிரதான விநியோகஸ்தராகச் செயற்பட்டுள்ளார். பாசிக்கே இந்த போதைப்பொருள் விநியோக வலையமைப்பை இயக்கியுள்ளார்.
போதை பொருளை கடத்துவதற்காக தெற்குக் கடலோர மீன்பிடிச் சமூகத்துடனும் சிலாபம் பிரதேச மீன்பிடிச் சமூகத்துடனும் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். தெற்கில் இயங்கிய பிரதான போதைப்பொருள் மாபியாவான ‘தெஹிபாலே’ என்பவர் இவருக்கு எதிராக செயற்பட்டுள்ளார்.
அவருடமிருந்து வந்த அச்சுறுத்தல்கள் காரணமாக துபாய் நாட்டிற்குச் சென்று அங்கிருந்து நிரந்தரச் செயல்பாட்டு மையம் ஒன்றை அமைத்து இந்த போதை வலையமைப்பை இயக்கியதாகவே தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன் பின்னர் போதைப்பொருள் வலையமைப்பின் மற்றொரு பிரதான நபராகக் கருதப்படும் மொஹமட் சித்தீக்குடன் இணைந்து ஆப்கானிஸ்தான் விநியோகப் பாதைகள் ஊடாக ஹெரோயின் மற்றும் ஐஸ் போன்ற செயற்கைப் போதைப்பொருட்களை இலங்கைக்குக் கொண்டு வர இவர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
இவரின் உண்மையான பெயர் ஷீரான் பாசிக், இவர் பல்வேறு சந்தர்ப்பங்களில் பல கடவுச்சீட்டுகளைப் பெற்றுள்ளார். இதில் ஒரு கடவுச்சீட்டைப் பெற்ற விதம் பெரும் சர்ச்சைக்குரியதாக மாறியது.
தெஹிவளையிலுள்ள குறைந்த வருமானம் பெறும் மக்கள் வாழும் 68- 34 வத்த பகுதிகளில் நலன்புரித் திட்டங்களை இவர் முன்னெடுத்துள்ளார்.
இதற்குப் பயன்படுத்தப்பட்ட பணம் போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதிக்கப்பட்ட பணமாக இருக்கலாம் என தற்போது சந்தேகிக்கப்படுகிறது.
இவ்வாறு அரசியல்வாதிகளுக்கும் கட்சிகளுக்கும் பணம் செலவிட்டுள்ளார். இது தவிர தமக்கு வரக்கூடிய அச்சுறுத்தல்களைக் கட்டுப்படுத்துவதற்காகச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகள் ஊடகவியலாளர்கள் மற்றும் அரசியல்வாதிகளுடன் நட்புறவைப் பேணி பணப் பரிமாற்றம் மற்றும் உதவிகளைச் செய்து வந்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.