

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவி வகித்த காலப்பகுதியில் அவரது மனைவி பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக லண்டன் செல்வதற்கு அரச நிதியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 30 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
இவ்வாறான நிலையில் பிரித்தானியாவின் அழைப்பின் பேரில் விஜயம் செய்த இராஜதந்திரிகளின் பெயர் பட்டியல் வெளியிட்டுள்ளதால் வழக்கில் பாரிய திருப்பங்களும், சர்ச்சைகளும் ஏற்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த பின்னணியில் சிவில் சமூகச் செயற்பாட்டாளர் ஓஷல ஹேரத் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் பிரித்தானியாவில் இது குறித்து தகவல்களை கோரியிருந்தார். ஆனால் பிரித்தானியாவின் தகவல் ஆணைக்குழு ஆரம்பக்கட்டத்தில் சில எதிர்ப்புகளை தெரிவித்திருந்தது.
ரணில் விக்ரமசிங்க விஜயம் செய்த 2023 செப்டெம்பர் 22- 23 திகதி காலப்பகுதியை உள்ளடக்கியதாக ஓஷல ஹேரத்தின் தகவல் அறிக்கையில் பிரித்தானிய அரசின் அழைப்பின் பேரில் பிரித்தானியாவுக்கு விஜயம் செய்த இராஜதந்திரிகள் யார் என்ற கேள்வி மிக முக்கியமானதாகும்.
அரசாங்கம் அழைப்பு விடுத்திருந்தால் அந்த அழைப்பை ஏற்று வந்தவர்கள் யார் மற்றும் அவர்களுக்காக அரசாங்கம் எவ்வளவு பணம் செலவிட்டது என்பது குறித்தும் கேட்டிருந்தார். இந்த தகவல் அறியும் விண்ணப்பத்தில் மற்றொரு முக்கியமான விடயமொன்று வெளிப்படுத்தப்படுகின்றது.
பிரித்தானிய இராஜதந்திர மட்டத்தில் பிரித்தானிய அரசாங்கம் அல்லது அவர்களது கட்டமைப்பிற்குள் ஏற்றுக்கொள்ளப்பட்ட நான்கு வகையான விஜயங்கள் உள்ளன.
State Visit (அரசு விஜயம்): பிரித்தானிய மன்னர் அல்லது அரச குடும்பத்தின் அழைப்பின் பேரில் மேற்கொள்ளப்படும் விஜயங்கள்.
Guest of Government Visit (அரச விருந்தினர் விஜயம்): பிரித்தானிய நாடாளுமன்றம் அல்லது அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் மேற்கொள்ளப்படும் விஜயங்கள்.
Working Visit (பணி விஜயம்): உதாரணமாக இலங்கையின் ஜனாதிபதி அல்லது அரசியல்வாதி ஒருவர் அந்நாட்டிலுள்ள இலங்கைக் குடிமக்களையோ மன்றங்களையோ சந்திப்பதற்காக அல்லது தமது வணிகக் விடயங்கள் மற்றும் தூதரகப் பணிகளுக்காகச் செல்லும் தனிப்பட்ட மட்டத்திலான விஜயங்கள்.
Private Visit (தனிப்பட்ட விஜயம்): மருத்துவச் சிகிச்சை பெறுவதற்காக அல்லது ஏதேனும் நிறுவனத்தின் விழாக்களுக்குத் தனிப்பட்ட முறையில் அழைப்பை பெற்றுப் செல்லும் விஜயங்கள்.
அதனடிப்படையில் 2023 ஜூலை 9 ஆம் திகதி முதல் 2024 டிசம்பர் 4 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் பிரித்தானிய அரசின் அழைப்பின் பேரில் State Visit அல்லது Guest of Government Visit அரச அனுசரணையுடன் வருகை தந்த தலைவர்களின் பட்டியலும் அவர்களுக்காகப் பிரித்தானிய அரசு செலவிட்ட தொகையும் தற்போது பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில் ரணில் விக்ரமசிங்கவின் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
