செம்மணியில் இன்று கிடைத்த என்புக்கூடுகள்!!

செம்மணியில் இன்று கிடைத்த என்புக்கூடுகள்!!

 யாழ்ப்பாணம் – செம்மணி மனித புதைகுழிக்குள் இருந்து இன்றைய தினம்(07) குழந்தைகளின் என்பு கூடுகள் உட்பட நான்கு என்புக் கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 10ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம் நடைபெற்றது.

அதன் போது , ஏற்கனவே அடையாளம் காணப்பட்டிருந்த என்பு கூடுகளில் இரண்டு என்பு கூட்டு தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன், நான்கு என்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு , அவற்றை சுத்தம் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

அதன் அடிப்படையில் இதுவரையான காலப்பகுதியில் செம்மணி மனித புதைகுழியில், 259 மனித என்புகூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவற்றில் 254 மனித என்பு கூட்டு தொகுதி முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை , புதைகுழிக்குள் இருந்து கடந்த சில தினங்களில் மீட்கப்பட்ட , மூக்குத்தி போன்றதான ஆபரணங்கள் , நாணய குற்றிகள் உள்ளிட்ட பிற பொருட்களான 14 பொருட்கள் நீதிமன்றுக்கு பரப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஓரிரு நாட்களாக புதைகுழிக்குள் இருந்து குழந்தைகளின் என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டு வருவதுடன் அவை அகழ்ந்து எடுக்கப்பட்டு வருகின்றன.

இதேவேளை நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட என்புக்கூடு ஒன்றின் மண்டையோட்டு பகுதி மாத்திரமே வெளித் தெரியும் வகையில் உள்ள நிலையில் , ஏனைய பாகங்கள் மயானத்தின் தகன மேடை கட்டுமானத்திற்குள் காணப்படுவதனால் , அதனை இலக்கமிடவில்லை எனவும் , முழுமையான என்பு கூட்டு தொகுதியையே இலக்கமிட்டு வருவதானால், தகன மேடை உடைக்கப்பட்டு , முழுமையான என்பு கூட்டு தொகுதி அடையாளம் காணப்பட்ட பின்னரே அதற்கு இலக்குமிடப்படும் என சட்டத்தரணி வி.எஸ் நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.    

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *