தீப்பற்றிய குப்பை மேட்டால் வீதிக்கு வந்த மக்கள்!!

தீப்பற்றிய குப்பை மேட்டால் வீதிக்கு வந்த மக்கள்!!

 யாழ்ப்பாணம் – கல்லூண்டாய் பகுதியில் அமைந்துள்ள யாழ்ப்பாண மாநகர சபையின் குப்பைமேடு நேற்று முன்தினம் (17) தீப்பற்றி எரிந்ததால், அப்பகுதியில் நச்சுப்புகை பரவியதால் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதுடன், அங்கு பதற்றமான சூழ்நிலையும் ஏற்பட்டது.

மானிப்பாய் பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட கல்லூண்டாய் பகுதியில் யாழ்ப்பாணம் மாநகர சபையினால் பராமரிக்கப்படும் குப்பைமேடே இவ்வாறு தீப்பற்றி எரிந்துள்ளது.

இதன் காரணமாக யாழ்ப்பாணம் – காரைநகர் பிரதான வீதி சுமார் இரண்டு கிலோமீற்றருக்கும் அதிகமான தூரத்திற்கு புகைமண்டலமாக காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், நவாலி மற்றும் கல்லூண்டாய் பகுதிகளில் வசிக்கும் மக்களின் வீடுகளுக்குள்ளும் நச்சுப்புகை சென்றதாகவும், இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் குப்பைமேடு பகுதிக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவ இடத்தில் யாழ்ப்பாணம் மாநகர சபையின் தீயணைப்பு வாகனம் இருந்த போதிலும், தீயை அணைப்பதற்கான நடவடிக்கைகள் உடனடியாக முன்னெடுக்கப்படவில்லை என மக்கள் குற்றஞ்சாட்டினர்.

தீயை அணைக்குமாறு மக்கள் வலியுறுத்தியபோது, தீயணைப்பு வாகனம் உள்ளே செல்வதற்கான பாதை சீராக இல்லை என மாநகர சபை பணியாளர்கள் தெரிவித்ததாகவும், இதனால் ஆத்திரமடைந்த மக்கள் அவர்களுடன் முரண்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு பொலிஸார் வருகை தந்து, எரியும் பகுதியை பார்வையிட்டனர். தீ ஏற்பட்டுள்ள பகுதிக்கு செல்வதற்கான பாதை சீராக இருப்பதாக தெரிவித்த பொலிஸார், உடனடியாக தீயை அணைக்குமாறு மாநகர சபை பணியாளர்களிடம் அறிவுறுத்தியுள்ளனர்.

எனினும், பொலிஸாரின் அறிவுறுத்தலுக்கும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், பொலிஸார் கடும் தொனியில் அறிவுறுத்திய பின்னரே தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, குறித்த குப்பைமேடு வாராந்தம் தொடர்ச்சியாக தீப்பற்றி எரிந்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதனைத் தடுப்பதற்கு யாழ்ப்பாண மாநகர சபையோ அல்லது மானிப்பாய் பிரதேச சபையோ இதுவரை ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை எனவும் அவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

மானிப்பாய் பிரதேச சபை உறுப்பினர் பகீரதன், தேசிய மக்கள் சக்தியின் மானிப்பாய் தொகுதி அமைப்பாளர் சுரேன் மற்றும் மானிப்பாய் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஜோன் ஜிப்ரிகோ ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

தொடர்ச்சியாக குப்பைமேடு தீப்பற்றி எரிவதால் ஏற்படும் புகை மற்றும் சுகாதார பாதிப்புகளுக்கு நிரந்தர தீர்வு காண அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *