விளையாட்டுத் துறை மேம்பாடு தொடர்பில் யாழ். அரச அதிபர் வெளியிட்டுள்ள அறிவிப்பு!!

விளையாட்டுத் துறை மேம்பாடு தொடர்பில் யாழ். அரச அதிபர் வெளியிட்டுள்ள அறிவிப்பு!!

 விளையாட்டுக் கழகங்கள் மற்றும் பாடசாலைகளின் விளையாட்டுத்துறை வளர்ச்சிக்குத் தேவையான வசதிகளைச் செய்துகொடுக்க கோரிக்கைகளை விரைவாக முன்வைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மாவட்டச் செயலாளர்களை வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் கேட்டுக்கொண்டார்.

வடக்கு மாகாண விளையாட்டு அபிவிருத்தி தொடர்பான விசேட கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.


இந்தக் கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த ஆளுநர், “விளையாட்டு அபிவிருத்தித் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எஸ்.அச்சுதனுடன் விளையாட்டுத்துறை அபிவிருத்தி தொடர்பில் அண்மையில் ஆராய்ந்திருந்தோம். அதற்கமைவாக நாம் சில துரித நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியுள்ளது.” என்று தெரிவித்தார்.

மேலும் அவர், “வடக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைகள், விளையாட்டுக் கழகங்கள் உள்ளிட்ட விளையாட்டுத்துறையின் அபிவிருத்தி சார்ந்த தேவைகளை விளையாட்டு உத்தியோகத்தர்கள் முறையாக அடையாளங்காண வேண்டும்.

அத்தேவைகளை மாவட்ட செயலாளர்கள் ஊடாக விளையாட்டு அபிவிருத்தித் திணைக்களத்துக்கு முன்வைப்பதன் மூலம் எமக்குத் தேவையான உதவிகளைப் பெற்றுக்கொள்ள முடியும். மாகாணத்துக்கான மிகப் பெரிய திட்டங்களை மாகாண விளையாட்டுத் திணைக்களம் தயாரித்து, விளையாட்டு அபிவிருத்தித் திணைக்களத்தின் அனுமதியைப் பெற்று, கேள்விப்பத்திரங்கள் மூலம் ஒப்பந்தங்களை வழங்கிய பின்னரே அதற்கான நிதியை அவர்கள் விடுவிப்பார்கள்.

எனினும், இந்த ஆண்டுக்குள் மிகப் பெரிய திட்டங்களைச் செயற்படுத்துவதற்கான கால அவகாசம் குறைவாகக் காணப்படுவதால், நடப்பு ஆண்டுக்குள் நிறைவேற்றக்கூடிய சாத்தியமான திட்டங்களை மாத்திரம் துரிதமாக முன்வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.” – என்று கேட்டுக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், மாகாணத்தில் விளையாட்டுப் பயிற்சிகளை முன்னெடுக்கும் பாடசாலைகளுக்குத் தேவையான உபகரணங்களின் பட்டியல் தயார்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவை வலயக் கல்விப் பணிப்பாளர்கள் ஊடாக மாவட்ட செயலாளர்களுக்கு முன்வைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

மேலும், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் விளையாட்டு மைதானம் ஒன்றை அமைப்பதற்கான பொருத்தமான காணி கோரப்பட்டுள்ளமையையும் அவர் சுட்டிக்காட்டினார். இதேவேளை, முல்லைத்தீவு மாவட்டத்தில் விளையாட்டு மைதானத்துக்கான காணி அடையாளங்காணப்பட்டு, அதற்கான முன்மொழிவுகள் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் இந்தக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் மாவட்ட செயலாளர் தனது கருத்தில், மாவட்டத்தில் பொருத்தமான அரச காணியை அடையாளம் காண்பதில் நடைமுறையிலுள்ள சிக்கல்களைத் தெளிவுபடுத்தினார்.

அத்துடன், விளையாட்டுக் கழகங்களுக்கு உதவிகளை வழங்குவதற்குக் கழகங்களின் மைதானக் காணி உரிமங்களில் சில சட்டச் சிக்கல்கள் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதன்போது, மன்னார் மாவட்டத்திலிருந்து முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை உடனடியாக விளையாட்டு அபிவிருத்தித் திணைக்களப் பணிப்பாளர் நாயகத்துக்கு அனுப்பி வைக்குமாறு மன்னார் மாவட்ட செயலாளருக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்தார். விளையாட்டுத்துறை மேம்பாடு சார்ந்த இந்தச் செயற்பாடுகளைத் தொடர்ச்சியாகக் கண்காணித்து முன்னெடுக்குமாறு உரிய அதிகாரிகளை ஆளுநர் அறிவுறுத்தினார்.

இந்தக் கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்ட செயலாளர்கள், முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்டங்களின் மேலதிக மாவட்ட செயலாளர்கள், மாகாண விளையாட்டுத் திணைக்களப் பணிப்பாளர் மற்றும் மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *