

ஈரான் நிர்ணயித்திருந்த கப்பல் போக்குவரத்து வழித்தடத்தை விட்டு விலகிச் சென்ற எண்ணெய் டாங்கர், ஹோர்முஸ் நீரிணையில் கடற்படை கண்ணிவெடியில் மோதியதைத் தொடர்ந்து வெடித்துள்ளதாக ஈரானின் அரசுடன் தொடர்புடைய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஈரானின் Tasnim செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, குறித்த டாங்கர் ஈரான் அதிகாரிகள் குறிப்பிட்டிருந்த கடல் வழித்தடத்தை விட்டு விலகிச் சென்ற பின்னர் கண்ணிவெடியில் மோதி வெடித்துள்ளது.
எனினும், இந்தச் சம்பவத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்டதா, எந்தக் கப்பல் தொடர்புடையது, சேதத்தின் அளவு என்ன என்பது குறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.
கடந்த ஜூன் 26ஆம் திகதி, ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்கள் ஈரான் இராணுவம் நிர்ணயித்த பாதைகளில் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்படும் என ஈரான் எச்சரித்திருந்தது.
ஈரானின் Mehr செய்தி நிறுவனம், தகவலறிந்த வட்டாரங்களை மேற்கோள் காட்டி வெளியிட்ட செய்தியில், அனுமதிக்கப்பட்ட பாதையை விட்டு விலகியதன் காரணமாகவே கப்பல் கடற்படை கண்ணிவெடியில் சிக்கியதாக தெரிவித்துள்ளது.
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான பதற்றம் கடந்த சில வாரங்களாக மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், இரு நாடுகளும் இராணுவ நடவடிக்கைகளை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளன.
