
கல்வி அமைச்சினால் புதிதாக வெளியிடப்பட்ட முதலாம் வகுப்பு மாணவர் சேர்க்கை சுற்றறிக்கை தொடர்பில் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
அரசாங்கப் பாடசாலைகளின் பரீட்சைகளுக்கான வினாத் தாள்களை தயாரிப்போர் மற்றும் விடைத்தாள்களை மதிப்பீடு செய்பவர்களின் விபரங்களைப் பாடசாலைகளுக்கு வெளியிட வேண்டும் என்ற புதிய நிபந்தனை இச்சுற்றறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளது.
குறித்த சுற்றறிக்கையின் உள்ளடக்கம் மூலம், பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் பிள்ளைகளுக்கான பாடசாலை சேர்க்கை கடுமையாகப் பாதிக்கப்படும் வகையில் அமைந்துள்ளதாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு கவலை தெரிவித்துள்ளது.
அரசாங்கம் உடனடியாக குறித்த சுற்றறிக்கையை இடைநிறுத்தி திருத்தத் தவறினால், கல்வித் துறைக்கான தங்கள் சேவைகளை மறுபரிசீலனை செய்யப்போவதாகப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு எச்சரித்துள்ளது.
